திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2020-04-04 22:45 GMT
அனுப்பர்பாளையம், 

திருப்பூர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் வாங்குவதற்காக அதிக அளவில் வெளியே செல்கின்றனர். சில இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. 

இதனால் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கே காய்கறிகளை கொண்டு சென்று விற்பனை செய்ய நடமாடும் காய்கறி அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் பொதுமக்கள் தங்கள் இடங்களிலேயே மீன்களை வாங்கும் வகையில் நடமாடும் மீன் நிலையமும் தொடங்கப்பட்டுள்ளது. 

நேற்று மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட திலகர்நகர் மற்றும் 2-வது மண்டலத்திற்குட்பட்ட நீதியம்மமாள்நகர் ஆகிய இடங்களில் இந்த திட்டத்தை திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கொடியசைத்து வைத்து தொடங்கிவைத்தார். இதையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியில் நின்று காய்கறிகள் மற்றும் மீன்களை வாங்கி சென்றனர். 

இதில் மாநகராட்சி உதவி கமிஷனர்கள் செல்வநாயகம், வாசுக்குமார், உதவி பொறியாளர் ஆறுமுகம், சுகாதார அலுவலர்கள் ராமச்சந்திரன், முருகன், முன்னாள் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், வளர்மதி கூட்டுறவு சங்க தலைவர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர்கள் கணேஷ், திலகர்நகர்சுப்பு, பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்குவதற்கான உதவிகளை செய்தனர்.

மேலும் செய்திகள்