பேரளம் அருகே பரிதாபம்: குட்டையில் குளித்தபோது சேற்றில் சிக்கி வாலிபர் பலி

பேரளம் அருகே குட்டையில் குளித்தபோது சேற்றில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-04-05 22:15 GMT
நன்னிலம்,

திருவாரூர் அருகே உள்ள பேரளம் சேத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சரவணன்(வயது 18). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர், நேற்று மதியம் தனது நண்பர்களுடன் வாழுர் கிராமத்தில் உள்ள ஒரு குட்டையில் குளிக்க சென்றார். அப்போது சரவணன் சேற்றில் சிக்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் சேற்றில் சிக்கிய சரவணனை அவர்களால் மீட்க முடியவில்லை. இது குறித்து பேரளம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், குட்டையில் இறங்கி சேற்றில் சிக்கி இருந்த சரவணனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குட்டையில் குளித்தபோது சேற்றில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சேத்தூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

மேலும் செய்திகள்