பல்லடத்தில் 2 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை - கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
பல்லடத்தில் 2 கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதைகளை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.
பல்லடம்,
பல்லடத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பல்லடம் பஸ் நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதனை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. தனது சொந்தசெலவில் அமைத்து மக்கள்பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். இதை தொடர்ந்து மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பல்லடம் அரசுஆஸ்பத்திரி நுழைவாயிலில் ரெயின்போ ரோட்டரி சங்கம் சார்பில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதே போல் அரசுஆஸ்பத்திரி பின்புற நுழைவாயிலில் வனம் இந்தியா அறக்கட்டளை சார்பில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த 2 கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதைகளையும் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சுல்தானா, நகராட்சி ஆணையாளர் கணேசன்,மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சங்கர், ரெயின்போ ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், தங்கலட்சுமிநடராஜன், சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள், வனம் இந்தியா நிர்வாகிகள் சுவாதிசின்னச்சாமி, நாச்சிமுத்து, டி.எம்.எஸ்.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.