திருவண்ணாமலை மாவட்ட ஆவின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு தினமும் 100 லிட்டர் பால் - கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம்பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் காப்பகத்துக்கு ஆவின் மூலம் தினமும் 100 லிட்டர் இலவச பால் வழங்குவதை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கிவைத்தார்.

Update: 2020-04-11 22:45 GMT
கலசப்பாக்கம்,

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட ஆவின் சார்பில் அரசு அங்கீகாரம் பெற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு தினமும் 100 லிட்டர் பால் தடையின்றி இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று செங்கம் சாலையில் செ.அகரம் கிராமத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு இலவச பால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஆவின் உதவிப்பொது மேலாளர் எம்.நாச்சியப்பன் முன்னிலை வகித்தார்.

இதில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு பால் வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேக்களூர் கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கும், இலவசமாக பால் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஆவின் மேலாளர் காளியப்பன், இயக்குனர் கீதா கலியபெருமாள், பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் பரணி, தலைவர்கள் மணி, அய்யனார், மாநில கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அமுதா அருணாச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்