ஆற்காடு அருகே, தொழிலாளி அடித்துக் கொலை - போலீஸ் விசாரணை

ஆற்காடு அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-04-12 22:15 GMT
ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், கண்ணமங்கலம் கூட்ரோட்டில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் இந்திராநகர் பகுதி உள்ளது. இங்கு நேற்று காலையில் முகம் சிதைந்த நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் தலை மற்றும் முகத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தன. கொலை செய்து உடலை சிறிது தூரம் இழுத்துச்சென்றுள்ளனர். அவருக்கு அருகில் ரத்தம் படிந்த ஸ்பேனர்கள் கிடந்தது. மேலும் சுமார் 100 அடி தூரத்தில் பழைய ஸ்கூட்டி நின்றது. அதில் ரத்தக்கரை படிந்திருந்தது. அதன் அருகே இரண்டு பழைய லாரி பேட்டரிகள், குடிநீர் பாட்டில் இருந்தன.

இதனையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த குமார் (வயது 46), தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்