அம்மா உணவகங்கள், தூய்மை பணியாளர்களுக்கு 1½ லட்சம் முட்டைகள்: கலெக்டர் வழங்கினார்

அம்மா உணவகங்கள், தூய்மை பணியாளர்களுக்கு 1½ லட்சம் முட்டைகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.

Update: 2020-04-28 22:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்கள், சமுதாய சமையல் கூடங்களில் உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் 2-ம் கட்டமாக 1 லட்சத்து 50 ஆயிரம் முட்டைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு முட்டைகளை அலுவலர்களிடம் வழங்கினார். நேற்று வழங்கப்பட்ட முட்டைகளில் சேலம் மாநகராட்சிக்கு 85 ஆயிரம் முட்டைகளும், ஆத்தூர், நரசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி ஆகிய 4 நகராட்சிகளுக்கு 40 ஆயிரம் முட்டைகளும், 33 பேரூராட்சிகளுக்கு 25 ஆயிரம் முட்டைகளும் வழங்கப்படுகிறது.

இதையடுத்து சேலம் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் கொரோனா பாதித்த நபர்கள் வசித்த பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 75 வகையான அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்யும் திட்டத்தையும் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மண்டல இயக்குனர் அசோக் குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்