ஆழ்வார்குறிச்சி அருகே, தோட்டத்தில் மின்வேலி அமைத்த 4 பேர் கைது

ஆழ்வார்குறிச்சி அருகே தோட்டத்தில் மின்வேலி அமைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-04-30 22:15 GMT
கடையம், 

ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளத்தை சேர்ந்த மோகன் ஜோசப் ராஜ் மற்றும் சேசையா ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தை கீழக்கடையத்தை சேர்ந்த சுந்தர்சிங் குத்தகைக்கு எடுத்துள்ளாராம். தோட்டத்தை கவனித்துக்கொள்ள செட்டிக்குளத்தை சேர்ந்த குமார் என்பவரை நியமித்துள்ளார். 

இந்தநிலையில் சுந்தர்சிங் தோட்டத்தை சுற்றிலும் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளதாக வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குநர் (பொ) கணேசன் உத்தரவின் பேரில் வனச்சரகர் நெல்லை நாயகம், பயிற்சி வனச்சரகர்கள் ரவி, பூவேந்தன், வனக்காப்பாளர்கள் டேனியல், பரமசிவன், வனக்காவலர் முத்து மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் உள்ளிட்டோர் சென்று சோதனையிட்டனர். இதில் தோட்டத்தை சுற்றிலும் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி சுந்தர்சிங், குமார், குட்டிராஜ், இளையராஜா ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 4 பேருக்கும் மொத்தம் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்