காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்களை கையெடுத்து கும்பிட்டு வீட்டுக்கு அனுப்பிய தாசில்தார்

கொரோனா ஆபத்தை உணராமல், காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்களை தாசில்தார் கையெடுத்து கும்பிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

Update: 2020-05-01 23:15 GMT
ஆறுமுகநேரி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் கொரோனா ஆபத்தை உணராமல் பலரும் வெளியில் சாதாரணமாக நடமாடி வருகின்றனர். அவர்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் இஸ்ரோ நில எடுப்பு பிரிவு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் காரில் ரோந்து சென்றார்.

கையெடுத்து கும்பிட்டார்

அப்போது கடற்கரையில் பொதுமக்கள் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். உடனே அங்கு சென்ற தாசில்தார் கோபாலகிருஷ்ணன், பொதுமக்களிடம் கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினார்.

பின்னர் அவர், பொதுமக்களை தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு கூறி கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைத்தார். இதனால் அனைவரும் நெகிழ்ச்சியுடன் அங்கிருந்து வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்