கோரிமேடு எல்லையில் புதுச்சேரிக்குள் நுழைய முயன்றவர்களை விரட்டியடித்த போலீசார்

கோரிமேடு எல்லையில் புதுச்சேரிக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

Update: 2020-05-06 02:47 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவை பகுதிக்குள் தமிழக மக்கள் நுழைவதை தடுக்க கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் ஆகிய எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளதால் தற்போது புதுவை எல்லைக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவசர சிகிச்சைக்கு வருவோர், பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மட்டுமே புதுவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

விரட்டியடிப்பு

இந்த நிலையில் பல்வேறு காரணங்களை கூறி புதுவைக்குள் நுழைபவர்களை தடுக்க எல்லைப்பகுதியில் தற்போது அதிக அளவில் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை கோரிமேடு எல்லைப்பகுதி வழியாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களை கூறி புதுவைக்குள் நுழைய முயன்றனர்.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உரிய காரணங்கள் இன்றி புதுவைக்குள் நுழைய முயன்றவர்களை லத்தியை சுழற்றி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்