அரிசி, காய்கறி தொகுப்பு வழங்க அனுமதி மறுத்து பள்ளியை பூட்டியதால் பரபரப்பு போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம்

ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு வழங்க அனுமதி மறுக்கப்பட்டு பள்ளி பூட்டப்பட்டது. இதனை கண்டித்து போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-06 03:50 GMT
திருப்பத்தூர்,

கந்திலி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு கெஜல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக விலகலை கடைப்பிடித்து, நல உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆட்டோ டிரைவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பலர் அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வாங்க வந்திருந்தனர். அப்போது கந்திலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பள்ளியில் அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்க அனுமதியில்லை என மறுத்து, பள்ளி கதவை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சம்பவ இடத்தில் இருந்த தி.மு.க.வினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறியலில் ஈடுபட போவதாகக் கூறினர். தகவலை கேள்விப்பட்டு ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் தேவராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அன்பழகன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

ரோட்டிலேயே வழங்கப்பட்டது

அப்போது அவர்கள், நல உதவியாக ஆட்டோ டிரைவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் தொகுப்பு வழங்குவதை கூட போலீசார் தடுப்பதாகக் கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டிலேயே ஆட்டோ டிரைவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு நல உதவி பொருட்களை சமூக விலகலை கடைப்பிடித்து வழங்கினர்.

மேலும் செய்திகள்