கரூர் மின்வாரிய அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று மின்கட்டணம் செலுத்திய பொதுமக்கள்
கரூர் மின்வாரிய அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்தினர்.
கரூர்,
கரூர் மின்வாரிய அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்தினர்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று நோயால் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வீட்டில் முடங்கி கிடந்தனர். இந்தநிலையில், வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு மின்சாரகட்டணம் செலுத்த கணக்கெடுப்பு பணி நடைபெறாததால், மின் கட்டணம் செலுத்த மே மாதம் 22-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்தது.
சமூக இடைவெளியை கடைபிடித்த பொதுமக்கள்
இதையடுத்து நேற்று கரூர், தாந்தோணிமலை, வெங்கமேடு, ராயனூர், வடிவேல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அறிவுறுத்தலின்போது, மின் கட்டணம் கட்ட வந்த பொதுமக்கள், முககவசம் அணிந்தும், நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று பொறுமையாக மின் கட்டணம் செலுத்தி சென்றதை காண முடிந்தது.
இதேபோன்று ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான விலையில்லா அரிசி,பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்க கடந்த 2, 3-ந்தேதிகளில் வீடு வீடாக சென்று விற்பனையாளர்கள் டோக்கன் வழங்கி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதிலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து பொருட்கள் வாங்கி சென்றனர்.