சேலத்தில் பயங்கரம்: கார் டிரைவர் கழுத்தை அறுத்து கொலை

சேலத்தில் கார் டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-05-06 23:00 GMT
சேலம், 

சேலத்தில் கார் டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மணியனூர் பாண்டுநகர் பகுதியை சேர்ந்தவர் இளமாறன். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி யசோதா. இவரும் ராணுவத்தில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு அபிஷேக் மாறன் (வயது 29), அபிநயா என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். இதில் அபிஷேக் மாறன் நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். மேலும் தனக்கு சொந்தமான 3 கார்களை அதே டிராவல்ஸ் நிறுவனத்தில் கொடுத்துள்ளார்.

அபிஷேக் மாறன் கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு ஜெபினா என்ற ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெபினா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் சென்று விட்டார். இதையடுத்து அபிஷேக் மாறன் தனது பாட்டி கண்ணம்மா மற்றும் தங்கை அபிநயாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடிக்கு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து கீழே வரவில்லை. இதனிடையே தொட்டிக்கு தண்ணீர் நிரப்புவதற்காக அபிநயா மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது அங்கு அபிஷேக் மாறன் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலையுண்டு பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

மேலும் இது குறித்து உடனடியாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர்கள் செந்தில், தங்கதுரை, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அபிஷேக் மாறன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த கொலை கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்ததா?, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கார் டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்