ஊரடங்கால் களையிழந்த சித்திரை திருவிழாக்கள்: மண்பானை, பலாப்பழங்களின் விற்பனை மந்தம்

ஊரடங்கால் களையிழந்த சித்திரை திரு விழாக்களால் மண்பானை, பலாப் பழங்களின் விற்பனை மந்தமாக நடைபெற்றது.

Update: 2020-05-07 05:13 GMT
வடகாடு,

ஊரடங்கால் களையிழந்த சித்திரை திரு விழாக்களால் மண்பானை, பலாப் பழங்களின் விற்பனை மந்தமாக நடைபெற்றது.

சித்ரா பவுர்ணமி

சித்திரை திருவிழாக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறும். வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சித்ரா பவுர்ணமி அன்று புதிய மண்பானை வாங்கி வந்து பச்சரிசியில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையல் வைத்து குடும்பத்துடன் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த விழா களையிழந்து உள்ளன.

அதுமட்டுமின்றி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பூக்கள், காய்கறி, பழங்கள் போதிய விலையில்லாத காரணத்தாலும், பொதுமக்கள் வருமானம்இன்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாலும் சித்ரா பவுர்ணமி பொங்கல் விழாவை கொண்டாட முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக மண்பானை விற்பனை மிகவும் மந்தமாக நடைபெற்றது.

பலாப்பழம் விற்பனை மந்தம்

இதேபோல் சித்ரா பவுர்ணமி அன்று சுவாமிக்கு பலாப்பழம் படையல்செய்து வழிபாடு நடத்தப்படும். இதன்காரணமாக வடகாடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழ விற்பனை மும்முரமாக நடைபெறும். ஊரடங்கு காரணமாக திரு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பலாப் பழங்களின் விற்பனையும் மந்தமாகவே நடைபெற்றது.

வடகாடு அருகே உள்ள மாங்காடு, ஆவனம் கைகாட்டி, கீரமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி போன்ற ஊர்களில் உள்ள கமிஷன் கடைக்களுக்கு விவசாயிகள் சரக்கு வாகனம், சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் கஷ்டப்பட்டு பலாப் பழங்களை விற்பனைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அதனை வாங்க யாரும்வரவில்லை. சித்ரா பவுர்ணமி அன்று நல்ல விலை போகும் என்று நம்பி இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும் செய்திகள்