கொரோனா பாதித்தவர்களின் மருத்துவ கழிவுகளை அனுமதி பெற்ற துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா கேட்டுக்கொண்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக் கப்பட்டவர்களின் மருத்துவ கழிவுகளை கையாளுதல், சேமித்தல், போக்குவரத்து செய்தல் மற்றும் வெளியேற்றுதலில் கீழ்கண்ட நெறிமுறைகளை பின்பற்றுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கோரப்படுகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ கழிவுகளை தனியாக பிரிக்க வேண்டும். அவற்றை மருத்துவ கழிவுகள் சேகரிக்கும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ, பைகளிலோ சேகரித்து உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவு பணியாளர்களிடம் முறை யாக ஒப்படைக்க வேண்டும்.
கையுறைகள், முக கவசங்கள்
கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமை படுத்தப்பட்டவர்கள் உபயோகித்த கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும்.
முக கவசங்களை மறு உபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி துண்டுகளாக்கி வெளியேற்ற வேண்டும். கொரோனா தொற்று அறிகுறியுள்ள பணியாளர்களை பணிபுரிய அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.