கொரோனா பரவல் எதிரொலி: சுகாதாரத்துறையில் 17 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படுகிறது - மராட்டிய அரசு முடிவு
கொரோனா பரவல் எதிரொலியாக சுகாதாரத்துறையில் 17 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மாநில அரசு போராடி வருகிறது.
இந்த நிலையில், சுகாதாரத்துறையில் காலியாக இருக்கும் 17 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கூறியதாவது:-
கொரானா பரவலுக்கு எதிராக போராடுவதற்கு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான வழிமுறையை அடுத்த 2 நாட்களில் அரசு கண்டுபிடிக்கும்.
ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முதல்-மந்திரி, தலைமை செயலாளருடன் ஆலோசித்து தீர்வு காணப்படும்.
தாராவி
கொரோனா பரவலின் மையப்பகுதியாக உருவெடுத்துள்ள தாராவியில் வசிப்பவர்களை அதிகளவில் தனிமைப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. தாராவி போன்ற மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதிகளில் சமூக விலகல் கடைபிடிக்க முடியவில்லை. எனவே சுமார் 2 ஆயிரம் பேரை தனிமைப்படுத்துவதற்காக மெகா தனிமைப்படுத்துதல் மையத்தை உருவாக்க முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.