புதுச்சேரியில் இருந்து 140 பேர் பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டனர்

புதுச்சேரியில் இருந்து 140 பேர் பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

Update: 2020-05-07 23:21 GMT
புதுச்சேரி,

பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டவர், அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர் என ஆயிரக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் படிப்புக்காகவும் பிரெஞ்சு நாட்டவர் பலர் இங்கு தங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விமானங்கள் இயக்கப்படாததால் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் புதுச்சேரியிலேயே தவித்து வருகின்றனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் உள்ளனர்.

சிறப்பு விமானம்

இந்த நிலையில் அவர்களை பிரான்சுக்கு அழைத்து செல்ல பிரெஞ்சு அரசாங்கம் சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்தது. அந்த விமானத்தில் பிரான்ஸ் செல்ல புதுவையில் இருந்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர், பிரான்ஸ் நாட்டவர் என 140 பேர் நேற்று காலை நான்கு பஸ்களில் சென்னைக்கு சென்றனர். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் அவர்கள் பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

கடந்த மாதம் ஏற்கனவே 155 பேர் புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்