கடலூர் மாவட்டத்தில் 4 டாக்டர்கள் உள்பட 34 பேருக்கு கொரோனா பாதிப்பு 390 ஆக உயர்வு

கடலூர் மாவட்டத்தில் 4 டாக்டர்கள் உள்பட 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 390 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-08 22:21 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 356 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி அரசு மருத்துவமனைகளிலும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரது ரத்த மாதிரி மற்றும் உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதில நேற்று சிலரது பரிசோதனை முடிவுகள் வந்ததில் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது தவிர கடலூரை சேர்ந்த ஒருவருக்கு சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவரையும் சேர்த்து 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

டாக்டர்கள் பாதிப்பு

இதில் சிதம்பரம், விருத்தாசலத்தை சேர்ந்த 4 டாக்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் சிதம்பரம் டாக்டர் ஒருவரும், 4 செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 டாக்டர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதால் மருத்துவ பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 390 ஆக உயர்ந்தது.

இது தவிர கடலூர் அரசு மருத்துவமனையில் 85 பேர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 58 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 60 பேர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 31 பேர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 17 பேர் என மொத்தம் 251 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

670 பேர் முடிவு?

கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 2 ஆயிரத்து 614 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இது வரை 6 ஆயிரத்து 643 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில் 390 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 5 ஆயிரத்து 583 பேருக்கு தொற்று இல்லை. இன்னும் 670 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்