கடலூர் மாவட்டத்தில் 92 இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு மற்ற இடங்களில் தடுப்பு கட்டைகள் அகற்றம்

கடலூர் மாவட்டத்தில் 92 இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சாலையில் இருந்த தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டது.

Update: 2020-05-08 22:24 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 356 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த நபர்கள் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளை சிவப்பு மண்டலமாக மாவட்ட நிர்வாகம் பிரித்துள்ளனது. இதன்படி மாவட்டம் முழுவதும் 92 இடங்கள் சிவப்பு மண்டலமாக உள்ளது. இந்த பகுதிகளை தவிர மற்ற இடங்களில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முன்பு பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை தற்காலிக சோதனைச்சாவடிகள், தடுப்பு கட்டைகள் அமைத்து சுகாதாரத்துறையினர், போலீசார் கண்காணித்தனர். தற்போது பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் தெருக்களில் மட்டும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஊரில் 5 பேர் பாதிக்கப்பட்டால், அந்த ஊர் முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் வருகிறது.

தடுப்பு கட்டைகள் அகற்றம்

இந்நிலையில் நேற்று சிவப்பு மண்டலத்தில் இல்லாத இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக சோதனைச்சாவடிகள், தடுப்பு கட்டைகளை போலீசார் அகற்றினர். கடலூரில் மணிக்கூண்டு, சுதர்சன் தெரு, டவுன்ஹால் மெயின்ரோடு, பீச்ரோடு, புதுப்பாளையம், இம்பீரியல்ரோடு, லாரன்ஸ்ரோடு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தடுப்பு கட்டைகள், தற்காலிக சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற இடங்களிலும் தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்