நேரு வீதியில் வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடு

புதுவை நேரு வீதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-08 23:09 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் வைரஸ் தாக்கம் சற்று குறைவாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து விதமான கடைகளையும் திறந்து கொள்ளலாம் என்று புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது. கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

புதுவையில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் கூடுவதை காணமுடிகிறது. இதனால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் நிறைந்த நேரு வீதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

அமலுக்கு வந்தது

போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பழனிவேலு தலைமையில் போக்குவரத்து காவல் துறையினர் இந்த நடவடிக்கையை நேற்று முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக காலை வேளைகளில் கடைக்கு வரும் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் தங்கள் வாகனங்களை பழைய சிறைச்சாலை வளாகத்தில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்கள் வாகனங்களை நேரு வீதியில் இடைவெளிவிட்டு நிறுத்த வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரு வீதி மற்றும் பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியுடன் பொருட்கள் வாங்கிச் செல்ல வழி ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்