கொரோனாவை மறந்தாச்சு..... கட்டுப்பாடு பறந்தாச்சு.... கோவையில் சுதந்திர பறவைகளாக சுற்றும் பொதுமக்கள்

கொரோனாவை மறந்து.....கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்டதுபோல் கோவையில் பொதுமக்கள் சுதந்திர பறவைகள்போல் வாகனங்களில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.

Update: 2020-05-08 22:00 GMT
கோவை,

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 2-ம் கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்ததன் காரணமாக சிவப்பு மண்டலத்தில் இருந்த கோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது. இதனால் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கோவையில் ஊரடங்கில் இருந்து சிறிது தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து கோவையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று பொருட்களை வாங்கிவருகிறார்கள்.

குறிப்பாக கோவை டவுன்ஹால் பகுதியை சுற்றியுள்ள பெரிய கடைவீதி, ரெங்கேகவுடர் வீதி, ராஜவீதி, நஞ்சப்பா ரோடு, அவினாசி ரோடு, நியூசித்தாபுதூர், காந்திபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் மோட்டார் சைக்கிளிலும், கார்களிலும், நடந்தும் செல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களில் 40 சதவீதம் பேர் முககவசம் அணியவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் ரெங்கே கவுடர் வீதி பகுதியில் மொத்த விற்பனை செய்யப்படும் எண்ணெய் கடைகள், மளிகை கடைகளில் கொரோனாவை மறந்து விட்டது போன்று கூட்டம் அலைமோதுகிறது.

கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பது பெரும் விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ? என்ற அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் காரணமாக கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மூடப்பட்டு இருந்த மேம்பாலங்கள் திறக்கப்பட்டு விட்டன. போக்குவரத்து சிக்னல்களும் இயக்கப்பட்டு உள்ளன. அத்துடன் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சுதந்திர பறவைகள்போல் சமூக இடைவெளி துளியும் இன்றி நாலாபுறமும் வலம் வருகிறார்கள்.

நேற்று காலை முதல் மதியம் வரை கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. இதற்கிடையே விதிகளை மீறி முககவசம் அணியாமல் வாகனங்களில் வலம் வந்தவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்