கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டக்குடி அரசு கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் தயார்

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டக்குடி அரசு கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-10 22:28 GMT
திட்டக்குடி,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 394 ஆக உள்ளது. இவர்களுக்கு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி அரசு மருத்துவமனைகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் திட்டக்குடி மருத்துவமனையை பொறுத்தவரை 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்று பலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதில் மேற்கொண்டு பாதிப்புகள் அதிகரித்தால், அதை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் திட்டக்குடியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென அங்கு 100 படுக்கை வசதிகள் சமூக இடைவெளியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவையான மருத்துவ உபகரணங்களும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு

இதையடுத்து, கல்லூரி வளாகம் மற்றும் கட்டிடத்துக்கு திட்டக்குடி தீயணைப்பு வீரர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அப்போது திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், சமூகநல தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்