உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை மகன் கைது

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-12 02:55 GMT
உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 62), தொழிலாளி. இவருடைய மகன் ஆறுமுகம்(35). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை காத்தமுத்துவுக்கும், ஆறுமுகத்துக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், தனது தந்தை என்றும் பாராமல் காத்தமுத்துவின் நெஞ்சில் கையால் தாக்கி உள்ளார். இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே அப்பகுதி மக்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காத்தமுத்துவின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். தந்தையை, மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்