ஈரோட்டில் வாகன போக்குவரத்தால் பரபரப்பாகும் சாலைகள்

ஈரோட்டில் வாகன போக்குவரத்தால் சாலைகள் பரபரப்பாகி வருகின்றன.

Update: 2020-05-12 23:30 GMT
ஈரோடு, 

கொரோனா ஊரடங்கில் இருந்து தொழிற் நிறுவனங்கள் கடைகள் இயங்க சற்று தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்து இருக்கிறது. ஈரோட்டில் அதிகாலை முதல் இரவு வரை வாகனங்கள் தடையின்றி சென்று கொண்டு இருக்கின்றன. ஊரடங்கின்போது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்த பல இடங்களிலும் தற்போது கார்கள் செல்லும் அளவுக்கு இடைவெளி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

அந்த பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் இருக்கிறார்கள். ஆனால் எந்த தடையும் இன்றி வாகனங்கள் சென்று கொண்டு இருக்கின்றன. மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கும் அதிகமாக செல்வது, ஆட்டோ, கார்களில் நெரிசலாக உட்கார்ந்து பயணம் செய்வது என்ற நிலை மீண்டும் வந்து இருக்கிறது.

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் முகக்கவசம் அணிந்து செல்கிறார்கள். ஊரடங்கு முடிந்தாலும் சமூக இடைவெளி தேவை என்று பல்வேறு மருத்துவர்கள், விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனவே அரசு வழங்கிய ஊரடங்கு தளர்வை சாதகமாக கொண்டு அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

வாகன போக்குவரத்தால் மீண்டும் சாலைகள் பரபரப்பாகி வருவதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வதா? இல்லை அச்சத்துக்கு உரியதா? என்பதே இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்