ராமநத்தம் அருகே மின்கம்பத்தில் கார் மோதல்; மின்வாரிய பெண் அதிகாரி பலி

ராமநத்தம் அருகே மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் மின்வாரிய பெண் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-05-12 21:38 GMT
ராமநத்தம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் ரவிராஜன்(வயது 50). இவர் சென்னை மாநகராட்சியில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா(45). இவர் சென்னை மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் ரவிராஜனும், பிரியாவும் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ரவிராஜன் ஓட்டினார். இவர்களது கார் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த லக்கூர் கை காட்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

பெண் பலி

அப்போது ரவிராஜனின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். ரவிராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்