விருத்தாசலம் அருகே கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

விருத்தாசலம் அருகே கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-12 21:48 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் மணிமுக்தாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தங்க தனவேல் தனது தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்குள்ள விவசாய நிலத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மத்திய அரசு கொண்டு வரும் புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். இந்த சட்டத்தால் ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். மேலும் விவசாய தொழிலை நம்பியிருக்கும் விவசாய கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

தொடர் போராட்டம்

எனவே இந்த திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் விவசாயிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்