கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் கிரண்குராலாவிடம் தி.மு.க. வினர் மனு கொடுத்துள்ளனர்.

Update: 2020-05-12 22:38 GMT
கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், நகர செயலாளர் சுப்ராயலு ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கின்றனர். அவ்வாறு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

நடவடிக்கை

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை, உரிய தகவல்களுடன் உங்களிடம் அளிக்கிறோம். அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து, உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகளை கொண்டு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த நேரத்தில், துன்பத்தில் இருக்கும் தமிழக மக்களுக்கு தி.மு.க. தொடர்ந்து ஆதரவளிக்கும். அதே சமயம், உங்களின் உடனடி நடவடிக்கை இன்னும் பல பொதுமக்களின் துயரத்தை தீர்க்க உதவி செய்ய வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்