உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்

உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு குமரகுரு எம்.எல்.ஏ. வேளாண் எந்திரங்கள் வழங்கினார்.

Update: 2020-05-13 22:54 GMT
உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணியன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 16 கூட்டுப்பண்ணை குழுக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் வேளாண் எந்திரங்களை வழங்கினார். அப்போது ஒன்றிய வீடு கட்டும் சங்கத்தலைவர் மணிராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரை, ஒன்றியக் குழு முன்னாள் துணை தலைவர் சாய்ராம், வேளாண்மை அலுவலர்கள் ஜோதி ராமலிங்கம், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிவாரண பொருட்கள்

இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர், சேமங்கலம், கீழ்தனியாலம்பட்டு, மேல்தனியாலம்பட்டு, பொய்கை, அரசூர், பருகம்பட்டு ஆகிய கிராமங்களில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 4 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவருடன் விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், முபாரக் அலி பேக், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், தாசில்தார் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்