ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-14 00:28 GMT
ஆரணி,

ஆரணி அரசு மருத்துவமனை குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மேலும் நகராட்சி அலுவலகம், அம்மா உணவகம், நகர மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகாமையில் உள்ளது. மருத்துவமனைக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்படுகிறது. இதன் அருகிலேயே குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு வார்டு, மாத்திரை வழங்கும் பகுதி அமைந்துள்ளது.

எனவே ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கக்கூடாது என மருத்துவமனை அமைந்துள்ள நகராட்சி வார்டு முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எம்.என்.சேகர் தலைமையில் அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்களுடன் இணைந்து ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைத்தார் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர்கள் வெங்கடேசன், ராஜசேகர், தே.மு.தி.க. நகர செயலாளர் சுந்தர்ராஜன், நகர இளைஞர் அணி செயலாளர் அரிகரன், விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் முத்து மற்றும் நகர அமைப்பாளர் லாரன்ஸ், அ.தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்