சேலத்தில் பரிதாபம் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-05-14 05:07 GMT
சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35). இவர் கடந்த 2016-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு சேர்ந்தார். இந்தநிலையில் 2017-ம் ஆண்டு அவர் சேலத்தில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் இதில் குணமடைந்த அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் பணியாற்றினார். இருந்தாலும் அவருக்கு தலையில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் முழுமையாக குணமாகாததால் மனவேதனையில் இருந்து வந்தார்.

தற்கொலை

தற்போது ராமகிருஷ்ணன் திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். தலையில் வலி அதிகமானதால் விடுமுறை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் அவர் சேலம் வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ராமகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ராம கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்