கயத்தாறு அருகே, கார்-மொபட் மோதல்; விவசாயி பலி
கயத்தாறு அருகே கார்-மொபட் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
கயத்தாறு,
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே மேட்டு பிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சொள்ளமாடன் (வயது 72). விவசாயி.
இவர் நேற்று மதியம் தனது மொபட்டில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து மொபட்டில் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சொள்ளமாடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று, சொள்ளமாடனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சென்னை அம்பத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்த சுரேஷ் செல்வினிடம் விசாரித்து வருகின்றனர்.