திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவமனையை திறந்து பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்க வேண்டும் - டாக்டர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவமனையை திறந்து பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-05-15 00:01 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் பி.பிரபாகரன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். டாக்டர்கள் சிவகுமார், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் சிவன்அருள் பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள் தங்களது மருத்துவமனையை திறந்து பாதுகாப்புகளுடன் சிகிச்சை அளிக்க வேண்டும். டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பாதுகாப்புடன் கவச உடை அணிய வேண்டும். கடந்த மாதம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 500 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு அரசு மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. டாக்டர்கள் வாட்ஸ்-அப் மூலம் மருந்துகளை எழுதி நோயாளிகளுக்கு அனுப்பலாம். வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீபன், டாக்டர்கள் லீலா சுப்ரமணியம், எஸ்.ஜெயராமன், தங்கமணி, டி.பி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் சுமதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்