உளுந்தூர்பேட்டை அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா

உளுந்தூர்பேட்டை அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா.

Update: 2020-05-15 01:35 GMT
உளுந்தூர்பேட்டை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கூடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிராம மக்கள் திரண்டு தடையை மீறி மீன்பிடி திருவிழா நடத்தி உள்ளனர். அதாவது, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றத்தில் பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரியில் தற்போது தண்ணீர் வற்றிவிட்டது. அதனால் அப்பகுதி மக்கள் ஏரியில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

இதையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் நேற்று அந்த ஏரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வலைகளைக் கொண்டும், கைகளால் துளாவியும் ஏரியில் இறங்கி போட்டி போட்டு ரகம், ரகமான மீன்களை பிடித்தனர். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவிலான மீன்களை அள்ளினர். கெண்டை, கெளுத்தி, கட்லா, விரால், கொரவை உள்ளிட்ட ரக மீன்கள் அதிகளவில் பிடிபட்டன. இந்நிலையில் ஊரடங்கை மீறி நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழா குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்