சேலத்தில் உடல் எரிந்த நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

சேலத்தில் உடல் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-05-16 03:58 GMT
சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் அருகே தொட்டு ராமசாமி தெரு உள்ளது. இங்குள்ள ரெயில்வே காம்பவுண்ட் சுவரையொட்டி நேற்று அதிகாலை 55 வயதான ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம்மாள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் எரிந்த நிலையில் கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் எரிந்த நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. காகிதங்கள் பொறுக்கும் தொழிலாளி யாராவது? இரவில் இந்த பகுதியில் கொசுவர்த்தி சுருள் வைத்து கொண்டு தூங்கும் போது அதிலிருந்து தீ பரவி உடல் கருகி இறந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

கொலையா?

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது எரித்து கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

செவ்வாய்பேட்டையில் மார்க்கெட் இருப்பதால் அந்த பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்த இடத்தில் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்