ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்: தந்தை-மகன் வெட்டிக்கொலை - மதுபோதையில் வாலிபர் வெறிச்செயல்

ஓட்டப்பிடாரம் அருகே மதுபோதையில் நடந்த தகராறில் தந்தை, மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-05-19 00:00 GMT
ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் காளிச்சாமி (வயது 40). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் காளிப்பாண்டியன் மகன் பாலமுருகன் (22). இவரும், காளிச்சாமியும் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே மதுபோதையில் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அருகில் உள்ள தனது வீட்டில் சென்று அரிவாளை எடுத்து வந்து காளிச்சாமியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கருப்பசாமி அதிர்ச்சி அடைந்து பதறியடித்துக் கொண்டு வந்தார். மகனை மீட்டு பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

பின்னர் கருப்பசாமியும், அவருடைய இளைய மகன் மகராஜனும் (26) மோட்டார் சைக்கிளில் பாலமுருகன் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளனர்.

அப்போது, வீட்டில் போதையில் இருந்த பாலமுருகன், அவரது தந்தை காளிப்பாண்டியன் ஆகியோர் அரிவாளை எடுத்து வந்து மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய கருப்பசாமி, மகராஜன் ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின்னர் பாலமுருகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி, சப்-இன்ஸ்பெக்டர்கள் எபனேசர், ஆதிலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்தவர்களின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பாலமுருகனின் தந்தை காளிப்பாண்டியனை போலீசார் கைது செய்தனர். பாலமுருகனை தேடி வருகின்றனர். தந்தை, மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகராஜனுக்கு உமா என்ற மனைவியும், காசிகா லட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்