திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சண்முகம் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2020-05-21 00:03 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சண்முகம் அறிவுறுத்தி உள்ளார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைள், குடிமராமத்து பணிகள், தூர்வாரும் பணிகள் மற்றும் குறுவை தொகுப்பு திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், அரசு அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குடிமராமத்து பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதற்காக அதிக திறன் கொண்ட எந்திரங்களை மற்ற மாவட்டங்களில் இருந்து வரவழைத்து உரிய நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும். இப்பணிகளை ஆய்வு செய்ய துணை கலெக்டர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினசரி பணிகள் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

பரப்பளவை அதிகரிக்க...

குறுவை தொகுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு குறுவை சாகுபடிசெய்யும் பரப்பளவை அதிகரிக்க செய்ய வழிவகை செய்ய வேண்டும். குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் கடனுதவி விடுதல் இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் குறுவை சாகுபடிக்கு விதை, உரம் தேவையான அளவு கையிருப்பில் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜமூர்த்தி, துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர்கள் ஜெயபிரீத்தா, புண்ணியக்கோட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்