ஞாயிற்றுக்கிழமையில் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி கர்நாடக அரசு உத்தரவு

முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது, ஞாயிற்றுக்கிழமையில் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-21 22:45 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் பொது முடக்கம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. அந்த நாளில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை என்று அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அந்த உத்தரவில் திருத்தம் செய்துள்ள கர்நாடக அரசு, ஞாயிற்றுக்கிழமைகளில் திருமண நிகழ்ச்சி அனுமதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசின் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அனில்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

“கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பஸ் உள்பட போக்குவரத்து, வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி வரை இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கடந்த 18-ந் தேதி அறிவிக்கப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் சிறிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் திருமண நிகழ்ச்சி நடத்த முன்கூட்டியே முடிவு செய்திருந்தால் அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அரசு வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.”

இவ்வாறு அனில்குமார் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்