காட்பாடியில் இருந்து 1,440 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பீகார் பயணம் - கலெக்டர் வழியனுப்பி வைத்தார்

பீகார் மாநிலத்தை சேர்ந்த 1,440 தொழிலாளர்கள் காட்பாடியிலிருந்து சிறப்பு ரெயிலில் சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டனர். அவர்களை கலெக்டர் சண்முகசுந்தரம் வழியனுப்பி வைத்தார்.

Update: 2020-05-21 23:36 GMT
காட்பாடி, 

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பிறப்பிக்கப்படட ஊரடங்கால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முடங்கியுள்ள வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் தமிழக அரசு அனுப்பி வைத்து வருகிறது. வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 6-ந் தேதி முதல் காட்பாடியிலிருந்து சிறப்பு ரெயில்கள் மூலம் ஜார்க்கண்ட்,, பீகார், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 9 ஆயிரம் பேர் 8 கட்டங்களாக சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களுடைய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து 9-வது கட்டமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் செய்து வந்த தொழிலாளர்கள் பீகாருக்கு அனுப்பப்பட்டினர். வேலூரிலிருந்து 493 பேர், திருவண்ணாமலையில் இருந்து 248 பேர், ராணிப்பேட்டையில் இருந்து 404 பேர், திருப்பத்தூரில் இருந்து 295 பேர் என மொத்தம் 1, 440 பேர் நேற்று காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் அனுப்பும் பணி நடந்தது.

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை என பல்வேறு நகரங்களில் தங்கியிருந்தவர்கள் அரசு சிறப்பு பஸ்கள் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பின்னர் சிறப்பு ரெயில் பெட்டிகளில் ஏறி அமர்ந்தனர்.

அவர்களை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர் அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர்கள் கணேஷ், இளம்பகவத், காட்பாடி தாசில்தார் பாலமுருகன், ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத் ,காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதா அவர்களுக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் நேற்று மாலை 6 மணிக்கு ஹராரியா நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்