முக கவசம் அணியாத 262 பேருக்கு அபராதம் மாநகராட்சி நடவடிக்கை

மதுரையில் முக கவசம் அணியாத 262 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2020-05-22 04:31 GMT
மதுரை, 

மதுரையில் கொரோனா ஒழிப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு பூட்டு போடப்பட்டு சீல் வைக்கப்படுகின்றன. அதே போல் கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோர் உத்தரவின் பேரில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி நேற்று மதுரை மாநகரில் முக கவசம் அணியாமல் வந்த 262 பேரிடம் இருந்து தலா ரூபாய் 100 வீதம் மொத்தம் ரூ.26 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் விசாகனின் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். முக கவசம் அணிந்து வெளியே வராதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடரும் என்று மாநகராட்சி கமிஷனர் விசாகன் தெரிவித்தார்.

அபராதம்

இந்தநிலையில் வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி வீட்டிலிருந்து கடைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், காவல்நிலையம், மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். முக கவசம் அணியாமல் வாகனம், மோட்டார் சைக்கிள், மிதிவண்டி மற்றும் நடந்து வந்தாலும் முக கவசம் அணிந்து வரவேண்டும். மேலும் கடைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

இதில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து தங்கள் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்