மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு சிறப்பு கடன் உதவி அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கோவிட்-19 சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2020-05-23 03:37 GMT
திருச்சி, 

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கோவிட்-19 சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் சுயஉதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். 

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு கடன் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், கொரோனா நோய் தொற்று பரவலால் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறப்பு கடனுதவி திட்டங்களை முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது, கோவிட்-19 சிறப்பு நகைக்கடன் மிக குறைந்த வட்டியிலும்(58 பைசா), சுயஉதவிக்குழுக்களுக்கான சிறப்பு கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. 

சிறப்பு நகைக்கடன் திட்டத்தில் கிராம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 7 சதவீதம் குறைந்த வட்டி விகிதத்தில் 6 மாத காலத்துக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், சுயஉதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கோவிட்-19 கடனுதவியாக 1,500 குழுக்களுக்கு ரூ.12 கோடி கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் வங்கி கிளைஅளவில் 2,660 குழுக்களும், சங்க அளவில் 6,190 குழுக்களும் உள்ளது. இதில் சிறப்பு கடனுதவிக்கு தகுதியுள்ள குழுக்களுக்கு 75 குழுக்களுக்கு ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் காளியப்பன், துணைத்தலைவர் செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் தனலெட்சுமி, வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் முத்தமிழ்செல்வி மற்றும் வங்கியின் உதவி பொது மேலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்