275 தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் அரசு கொறடா வழங்கினார்

தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும், அம்மா உணவகத்தின் மூலம் விலையில்லாமல் உணவு வழங்குவதற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

Update: 2020-05-23 06:45 GMT
அரியலூர், 

அரியலூரில், நகராட்சி மற்றும் மாவட்ட வணிகர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும், அம்மா உணவகத்தின் மூலம் விலையில்லாமல் உணவு வழங்குவதற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு, நகராட்சியில் பணிபுரிந்து வரும் 275 தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்களான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் போன்ற அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார். 

அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் ஏற்கனவே அரியலூர் நகராட்சியில் உள்ள 2 அம்மா உணவகங்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்குவதற்காக ரூ.3 லட்சம் வழங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் அம்மா உணவகத்திற்கு மேலும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை நகராட்சி ஆணையர் குமரனிடம் வழங்கினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வணிகர்கள் சங்க தலைவர் ராமலிங்கம் மற்றும் பொறுப்பாளர்கள், வணிகர்கள், தூய்மைப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்