தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட வெளிமாநில தொழிலாளர்களால் பரபரப்பு

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட வெளிமாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-23 22:03 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட வெளிமாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிமாநில தொழிலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். அவர்களில் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதற்காக, பதிவு செய்து காத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் உரம், பட்டாணி உள்ளிட்ட மூட்டைகளை தூக்கும் கூலித்தொழிலில் ஈடுபட்டு வரும் பீகார் மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்வதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து பல நாட்கள் ஆகியும், இதுவரை எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும், தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம், சிப்காட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்