சொந்த ஊர் செல்ல பணம் வசூலிப்பதாக புகார்: ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநில தொழிலாளர்கள்

சொந்த ஊர் செல்ல பணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து அரசூர் ஊராட்சி அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-23 22:40 GMT
சூலூர், 

சொந்த ஊர் செல்ல பணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து அரசூர் ஊராட்சி அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசூர் ஊராட்சி அலுவலகம் முன்பு சுமார் 400-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:- அரசூர் ஊராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம்.

பணம் வசூல்

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்திருந்த சூழ்நிலையில், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ்களில் பயணம் செய்ய தலா ரூ.500, ரூ.1000 என பணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்சுக்குள் இருப்பவர்கள் அந்த பணத்தை கொடுக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அனுமதிக்கிறார்கள்.

ஏற்கனவே வேலை இழந்து தவிக்கும் நாங்கள் பணம் இல்லாததால் பல நாட்களாக அரசூர் பகுதிகளில் தங்கியிருந்து உணவுக்கு வழியின்றி தவித்து வருகிறோம். இந்த நிலையில், உணவுக்கே காசு இல்லாத சூழ்நிலையில், பணத்தை கொடுத்து எங்களால் எப்படி பயணிக்க முடியும்?. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உணவுக்கு வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்