குடிநீர் வினியோகம் செய்வதில் தகராறு காங்கிரஸ் பிரமுகர் அரிவாளால் வெட்டிக் கொலை

குடிநீர் வினியோகம் செய்வதில் தகராறு காங்கிரஸ் பிரமுகர் அரிவாளால் வெட்டிக் கொலை

Update: 2020-05-24 22:15 GMT
கோலார் தங்கவயல்,

குடிநீர் வினியோகம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் பிரமுகர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா கவுடேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணப்பா (வயது 50). அதேப்பகுதியை சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி (45). இவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், கவுடேனஹள்ளி கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதியும் இதுதொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, வெங்கட் ரெட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெங்கடகிருஷ்ணப்பாவை சரமாரியாக வெட்டினார். இதில் வெங்கடகிருஷ்ணப்பா பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடினார். வெங்கட் ரெட்டி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சீனிவாசப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடகிருஷ்ணப்பாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர், பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, வெங்கடகிருஷ்ணப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் பிரமுகர் வெங்கடகிருஷ்ணப்பாவை கொலை செய்தவரை கைது செய்யக்கோரி, காங்கிரஸ் கட்சியினர் சீனிவாசப்பூரில் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சீனிவாசப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்