பாலமேடு பகுதியில் முந்திரி பழ சீசன் தொடக்கம்

மதுரை பாலமேடு பகுதியில் முந்திரிப் பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில் அதற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2020-05-25 03:29 GMT
அலங்காநல்லூர்,

மதுரை பாலமேடு பகுதியில் உள்ள சரந்தாங்கி, கணவாய்மேடு, வெள்ளையம்பட்டி உள்ளிட்ட மலைப்பகுதி கிராமங்களில் மா, கொய்யா, பப்பாளி, சப்போட்டா போன்ற பல்வேறு பழ வகைகள் விளைச்சல் பெறுகிறது. தற்போது மாம்பழ சீசன் இருந்தாலும் அத்துடன் வருடம் ஒரு முறை பலன் தரும் முந்தரி பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ளது.

ஒரு கிலோ ரூ.40-க்கும், ஒரு கூறு ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது தற்போது ஊரடங்கு காரணமாக இந்த பழங்களுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என்று முந்திரி பழ விவசாயிகள் கவலையில் உள்ளனர். பஸ் போக்குவரத்து தொடங்கினால் வெளி மாவட்டங்களுக்கு கூடை கூடையாக பழங்களை அனுப்ப வாய்ப்பு இருக்கும். அதுவரை தற்போதைய நிலை தான் இருக்கும்.

இது குறித்து மறவபட்டி மாரிசெல்வம் என்ற விவசாயி கூறியதாவது:-

தேக்கம்

முந்திரிப் பழமானது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, இத்துடன் நம நமப்பும் இணைந்திருக்கும். மேலும் கமகமவென்று மண மணக்கும் தன்மை நிறைந்தது. வறட்சியிலும் விளைச்சல் தரும் இந்த முந்திரி பழ மரம் தமிழகத்தில் நீர் செழிப்பான பகுதிகளில் ஏராளமாக உள்ளன. முந்திரி விதைகளை அகற்றிவிட்டு பழங்கள் மட்டும் சில்லறை விற்பனைக்கு வருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை மருத்துவ குணம் நிறைந்த இந்த பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பழ சீசன் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவுக்கு வரும். ஊரடங்கால் இந்தப் பழங்களை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்