சுங்குவார்சத்திரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சுங்குவார்சத்திரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-05-26 23:15 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த கந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் அய்யப்பன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நாகலட்சுமி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்ந்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு விட்டார் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை வீட்டு வெளியேறி 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஊரில் வசித்து வந்தனர். திருமணம் ஆகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று வழக்கம் போல அய்யப்பன் மது குடித்து விட்டு வந்தார். நாகலட்சுமி அய்யப்பன் மது குடிப்பதை கண்டித்து விட்டு அவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த அய்யப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் வீட்டில் அய்யப்பன் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சுங்குவார் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்