கழுத்தை நெரித்து கணவனை கொன்று நாடகமாடிய மனைவி; கள்ளக்காதலனுடன் கைது

நாமக்கல் அருகே கணவனின் கழுத்தை நெரித்துக்கொன்று நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-05-30 01:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் அடுத்த தூசூர் அருகே உள்ள கொடிக்கால்புதூரை சேர்ந்தவர் ராமன் (வயது 35). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சத்யா (29). கடந்த 21-ந் தேதி இரவு வீட்டில் ராமன், திடீரென விசித்திரமாக கூச்சலிட்டதாக கூறி ராமனின் சகோதரரை தனது வீட்டிற்கு சத்யா அழைத்து வந்துள்ளார். அவர் அங்கு வந்தபோது ராமன் இறந்து கிடந்தார்.

ஆனால் அவரது இறப்பிற்கான காரணம் தெரியாததால், ராமன் இயற்கையாக இறந்திருக்கலாம் என கருதிய அவரது உறவினர்கள் அவரது உடலை தகனம் செய்தனர். இதனிடையே ராமனை, அவரது மனைவி சத்யா கொலை செய்ததாக நாமக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், ராமனின் மனைவி சத்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நாமக்கல் போலீசார் கூறியதாவது:-

சத்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராமமூர்த்தியுடன் (36) கடந்த 7 வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதை அறிந்த ராமன், சத்யாவை கண்டித்துள்ளார். அதனால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ராமன், சத்யாவை தகாத வார்த்தையால் கடுமையாக திட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த சத்யா, அவரின் கள்ளக்காதலன் ராமமூர்த்தியுடன் சேர்ந்து ராமனை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்.

அதற்காக அன்று இரவு வீட்டில் இருந்த ராமனுக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரைகளை சத்யா கலந்து கொடுத்துள்ளார். பின்னர் சத்யா, ராமமூர்த்தியுடன் சேர்ந்து ராமனின் கழுத்தை கைகளால் நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு ஒன்றும் தெரியாதது போல ராமனின் சகோதரரிடம் ராமன் விசித்திரமாக கூச்சலிட்டதாகவும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை என கூறியும் நாடகமாடினார். இந்த தகவல்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சத்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராமமூர்த்தியுடன் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்