உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-06-02 04:15 GMT
உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாதேவன், மகேந்திரன். அண்ணன்- தம்பிகளான இவர்கள் 2 பேருக்கும் இடையே சம்பவத்தன்று சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அந்த சமயத்தில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சண்டையை விலக்கி விட்டார்.

இந்த நிலையில் மகேந்திரன் தனது உறவினரான ஆமூர் கிராமத்தை சேர்ந்த குமார் மற்றும் அவருடைய மகன்கள் அருண், சுதாகர் உள்பட 4 பேருடன் சேர்ந்து முருகனிடம், நீ ஏன் மகாதேவனுக்கு ஆதரவாக செயல்படுகிறாய் என கூறி தகராறில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அங்கு வந்த முருகனின் அண்ணணான தொழிலாளி சுந்தரம்(55) என்பவர், ஏன் எனது தம்பியிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என கூறி மகேந்திரன் உள்ளிட்டவர்களை தட்டிக்கேட்டார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரத்தை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அருண் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்