பர்கூர் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை

பர்கூர் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-06-03 01:09 GMT

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மஜீத் கொல்லஅள்ளியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). சாலை பணியாளர். அதே பகுதியை சேர்ந்தவர் மூக்கன் என்கிற சென்னப்பன் (54). விவசாயி. இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது சென்னப்பன், முருகேசனை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து முருகேசன் மற்றும் அவரது மகன்கள் பிரபாகரன், வெற்றிவேல், பரசுராமன் உள்ளிட்டோர் சென்னப்பனை கட்டையால் சரமாரியாக தலையில் தாக்கினார்கள். இதில் சென்னப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதை தடுக்க சென்ற சென்னப்பன் மகன் மோகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல முருகேசன், மற்றும் அவரது மகன்களை சென்னப்பன் தரப்பினர் தாக்கியதாக கூறி அவர்களும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட சென்னப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்