பண்ருட்டி, வடலூர் ; 4 பேர் மீது குண்டர் சட்டம்

பண்ருட்டி, வடலூரில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2020-06-04 05:13 GMT
கடலூர்,

பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரை கடந்த மாதம் 17-ந்தேதி தாக்கியது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த தேவநாதன் மகன் சக்தி என்கிற சாமிநாதன் (வயது 28), செந்தில்வேலன் மகன் மேகநாதன் (32), சாத்தமாம்பட்டு மாசிலாமணி மகன் சசிக்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்வதற்காக காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சிறுதொண்டமாதேவி கிராமத்திற்கு சென்றார்.

அப்போது அவர்கள் 3 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்து, அவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல் வடலூர் அருகே கருங்குழி வண்ணான்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயப்பிரியன் கடந்த 21.5.2020 அன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிழக்குதெருவை சேர்ந்த கேசவபெருமாள் மகன் மூட்டைபூச்சி என்கிற சம்பத்குமார் (31) என்பவர் ஜெயப்பிரியனை வழிமறித்து ஆபாசமாக பேசி, அவரிடம் இருந்து ரூ.500-யை பறித்து சென்றார். இது பற்றி அவர் வடலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரை கைது செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது கொலை வழக்கு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் 30 திருட்டு வழக்குகள் உள்ளன.

இதையடுத்து இவர்கள் 4 பேரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின்பேரில் 4 பேரையும் காடாம்புலியூர், வடலூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகல்களை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

மேலும் செய்திகள்