கடலூரில் இருந்து சென்ற வாகனங்களை புதுச்சேரிக்குள் செல்ல விடாமல் தடுத்த போலீசார்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-04 05:38 GMT
நெல்லிக்குப்பம்,

 ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு வேலை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தினசரி சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றும் கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களை புதுச்சேரிக்குள் செல்ல விடாமல் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தியதால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

பின்னர் அரசின் அனுமதி கடிதம் வைத்திருந்தவர்களையும், அரசு அலுவலர்களையும் மட்டும் பரிசோதனை செய்து புதுச்சேரிக்குள் செல்ல அனுமதித்தனர். மற்ற அனைவரையும் மீண்டும் கடலூருக்கு திருப்பி அனுப்பினர்.

இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்